ஆர்த்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்துவீர்!
தோழர்களே, மதத்தின் பெயரால் பக்தியின் பெயரால், காவி வேட்டி சாமியார்கள் அரங்கேற்றும் அசிங்கங்கள், ஆபாசங்கள் எல்லையைத் தாண்டிவிட்டன. பொருளை மட்டுமல்ல; பொழுதை மட்டுமல்ல; மானத்தையே பறி கொடுக்கும் அவல நிலை நாளும் தொடர்கிறது! பெண்களைப் போகப் பொருளாக நடத்தும் கேவல நிலை தொடர்கிறது.
சட்டப்படி நான் தவறு ஏதும் செய்யவில்லை என்று சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
கருஞ்சட்டைத் தோழர்களே, மக்கள் மன்றத்தின் மூலம் இந்த மகராஜ்களை கொண்டு வந்து சந்தியில் நிறுத்துவோம்!
திராவிடர் கழகத்தின் செயல் திறன் எத்தகையது என்பதை நிரூபிப்போம். கைவிலங்கு பூட்டுங்கள் இந்த குடிகேடர்களுக்கு என்று அரசினை வலியுறுத்துவோம்!
பக்தியின் பகல் வேட விலாசத்தை விலாவாரியாக வெளிப்படுத்துவோம்!
பதினோராம் தேதி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெறட்டும் - நடைபெறட்டும்!!
நம்மைத் தவிர, வேறு யார்தான் முன் வருவார்கள்? நாடே நம்மை எதிர்பார்க்கிறது - பணி முடிப்போம் வாரீர், தோழர்களே!
- திராவிடர் கழகம்