போலி எதிர்த்தாக்குதல்:
நரேந்திர மோடியும் சிக்குகிறார்!

விசாரணை வளையத்துக்குள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் கொண்டு வர சி.பி.அய். அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.
அகமதாபாத், ஜூலை 29- போலி எதிர்த்தாக்குதல் வழக்கில் குஜராத் முதலமைச்சர் மோடியும் சிக்குவார் என்று தெரிகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு காவல்துறை எதிர்த்தாக்குதலில் சோராபுதீன் என்பவரும், அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.அய். நடத்திய விசாரணையில் சோரா புதீன் போலி எதிர்தாக்குதல் மூலம் சுட்டுக் கொல்லப் பட்டது தெரிய வந்தது.
சிறையில் 15 காவல்துறை அதிகாரிகள்
குஜராத் மாநிலத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த அமீத்ஷா உத்தரவின் பேரில் இந்த போலி எதிர்த்தாக்குதல் நடந்ததாக சி.பி.அய். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதை யடுத்து அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அமீத்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். அவரிடம் சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கில் 15 காவல் துறை அதிகாரிகள் கைதாகி சிறையில் உள்ளனர்.
அவர்களில் 2 பேர் அப்ரூவராகி உள்ளனர். இதன் மூலம் அமீத்ஷா மீதான கொலை, ஆள் கடத்தல், மிரட்டல், குற்றத்துக்கான ஆதாரத்தை அழித்தல், சதி திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாற்றுகள் உறுதிப் படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அமீத்ஷா மீதான குற்றச்சாற்றுகளை மேலும் ஆதாரபூர்வ மாக்குவதற்காக சி.பி.அய். மேலும் சிலரை விசாரிக்க தீர்மானித்துள்ளது. குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. பிசிபாண்டேயை விசாரிக்க சி.பி.அய். நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பாண்டே, போலி எதிர்த்தாக்குதல் விசாரணையில் குறுக்கீடு செய்திருப்பதாக ஒரு குற்றச்சாற்று உள்ளது. எனவே, பாண்டேயிடம் விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்த நிலையில் விசாரணை வளையத்துக்குள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் கொண்டு வர சி.பி.அய். அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மாநில உள்துறை பொறுப்பையும் வகித்து வருகிறார். போலி எதிர்த்தாக்குதல் குறித்து விசாரித்த சி.அய்.டி. பிரிவுத் தலைவர் ஜி.சி. ரெய்ஜெரை கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வேறு இடத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த இட மாறுதல் உத்தரவில் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார். இந்த இட மாறுதல் உத்தரவு சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக சி.பி.அய். கருதுகிறது.
சி.பி.அய். தயார்!
எனவே, இது தொடர்பாக நரேந்திர மோடியிடம் விசாரிக்க சி.பி.அய். முடிவு செய்துள்ளது. நரேந்திர மோடியை சி.பி.அய். அலுவலகத்துக்கு அழைக்க, தாக்கீது அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த தாக்கீதை அனுப்புவதற்கு டில்லி மேலிடத் திடம் அனுமதி கேட்டு விட்டு குஜராத் சி.பி.அய். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். சி.பி.அய். தலைமை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மோடி யிடமும் போலி எதிர்த்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெறும்.
சி.பி.அய்.யின் இந்த நடவடிக்கைககள் பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் கோபத்தையும் அதிருப்தி யையும் ஏற்படுத்தி உள்ளன. குஜராத் கலவரம் தொடர்பாக சி.பி.அய்.யின் ஒரு சிறப்புப் பிரிவு, கடந்த மார்ச் மாதம் நரேந்திர மோடியை வர வழைத்து விசாரணை நடத்தியது. அப்போது 9 மணி நேரம் மோடியிடம் சி.பி.அய். அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரித்தனர். தற்போது போலி எதிர்த்தாக்குதலுக்காக மோடியை சி.பி.அய். குறி வைத்துள்ளது.